ஐ.நா. பொது செயலாளருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்திப்பு

இந்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் ஐ.நா. பொது செயலாளரை இன்று சந்திப்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றடைந்து உள்ளார்.
ஐ.நா. பொது செயலாளருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்திப்பு
Published on

நியூயார்க்,

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தை அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்து வருகிறது. கடந்த 11ந்தேதி தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையில், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆகிய இருவரும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன், ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ரஷியாவிடமிருந்து இந்தியா எரிபொருள் வாங்குவது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த மத்திய மந்திரி ஜெய்சங்கர், நீங்கள் இந்தியா ரஷியாவிடமிருந்து எரிபொருள் வாங்குவது குறித்து பார்த்தீர்களானால் உங்கள் கவனம் ஐரோப்பாவில் இருக்க வேண்டுமென ஆலோசனை வழங்குகிறேன்.

எங்கள் எரிபொருள் பாதுகாப்பிற்காக ரஷியாவிடமிருந்து நாங்கள் எரிபொருள் வாங்குகிறோம். அந்த கணக்கீட்டை பார்த்தோமானால் ரஷியாவிடமிருந்து ஐரோப்பா ஒரு நாள் மதியம் வாங்கும் எரிபொருளை விட ரஷியாவிடமிருந்து இந்தியா ஒரு மாதம் வாங்கும் மொத்த எரிபொருள் அளவு குறைவு என்று கூறினார்.

இதன்பின்பு, கொரோனா 2வது அலையின்போது, இந்தியாவுக்கு அமெரிக்கா செய்த உதவியை நேற்று முன்தினம் பாராட்டி பேசினார். இதன்பின்னர், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான நான்காவது 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தையிலும் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

இதில், அமெரிக்க வர்த்தக செயலாளர் கினா ராய்மண்டோ மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரீன் தை ஆகியோரிடம் பேச்சுவார்த்தி நடத்தினார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஹோவர்ட் பல்கலை கழகத்தில் மாணவர்களிடையே உரையாடிய ஜெய்சங்கர், கொரோனா தொற்றால் அனைத்து நாடுகளும் பெரிய அளவில் பாதிப்புக்கு ஆட்பட்ட அனுபவங்களை நினைவுகூர்ந்து பேசினார்.

இதனையடுத்து, ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரெசை இன்று இந்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசுகிறார். இதற்காக அவர் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்டு சென்றார்.

அவரை ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி நேரில் சென்று வரவேற்றார். இந்த பயணத்தில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர், ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரெசை சந்திக்க இருக்கிறார் என திருமூர்த்தி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com