சிலி நாட்டில் ஓயாத போராட்டம்: அரசு தொழிற்சாலைக்கு தீவைப்பு - 5 பேர் பலி

சிலி நாட்டில் நடத்த போராட்டத்தில், அரசு தொழிற்சாலைக்கு தீவைக்கப்பட்டது. இதில் சிக்கி 5 பேர் பலியாயினர்.
சிலி நாட்டில் ஓயாத போராட்டம்: அரசு தொழிற்சாலைக்கு தீவைப்பு - 5 பேர் பலி
Published on

சாண்டியாகோ,

லத்தீன் அமெரிக்க நாடான சிலியில், மெட்ரோ ரெயில் கட்டணத்தை அரசு உயர்த்தியது. இதை கண்டித்து, அந்நாட்டு மக்கள் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் சாண்டியாகோ மற்றும் அன்டோபகாஸ்டா, வால்பராசோ, வால்டிவியா, சில்லான், டால்கா, டெமுகோ மற்றும் பூண்டா அரினாஸ் ஆகிய நகரங்களில் போராட்டக்காரர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனால் அசாதாரண சூழ்நிலை உருவானதை தொடர்ந்து, மேற்கூறிய நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அத்துடன் போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக மெட்ரோ ரெயில் கட்டண உயர்வை ரத்து செய்வதாக அதிபர் செபாஸ்டியன் பினெரா அறிவித்தார். ஆனாலும் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து வருகின்றனர். மேலும் அவர்கள் பஸ்கள், கடைகள் உள்ளிட்டவற்றுக்கு தீவைப்பது போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை இரவு சாண்டியாகோ நகரில் உள்ள ஒரு சூப்பர்மார்க்கெட்டுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்ததில் 4 பேர் பலியானார்கள். மேலும் சாண்டியாகோ உள்பட பல்வேறு நகரங்களில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் கடுமையாக மோதிக்கொண்டனர். இதற்கிடையே இந்த கலவரத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் கடைகள் மற்றும் தொழிற்சாலைகளை சூறையாடி கொள்ளையடித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு சாண்டியாகோ நகரில் உள்ள அரசு ஜவுளி தொழிற்சாலைக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்து பொருட்களை கொள்ளையடித்ததோடு, தொழிற்சாலைக்கு தீவைத்து விட்டு சென்றனர். இதில் தொழிற்சாலைக்குள் இருந்த 5 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். சில்லான் நகரில் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com