

ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலீபான் பயங்கரவாதிகள் நாட்டை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீவிரமாக முயன்று வருகின்றனர்.இதனால் அங்கு தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நீடிக்கிறது. இந்த சூழலில் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைக்கு பாகிஸ்தானும் ஒரு வகையில் காரணம் என்றும் ஆப்கானிஸ்தானின் சமாதான முன்னெடுப்பில் அந்த நாடு எதிர்மறையான பங்களிப்பை கொண்டுள்ளதாகவும், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி குற்றம் சாட்டினார்.இந்த நிலையில் அஷ்ரப் கனியின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் ஆப்கானிஸ்தானில் ஏற்படும் கொந்தளிப்பால் அதிகம் பாதிக்கப்படும் நாடு பாகிஸ்தான் என்பதை அஷ்ரப் கனிக்கு நான் சொல்ல விரும்புகிறேன். கடந்த 15 ஆண்டுகளில் பாகிஸ்தான் 70,000 உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. பாகிஸ்தான் ஒருபோதும் மோதலை விரும்பவில்லை. ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைக்கு பாகிஸ்தானை குறை கூறுவது நியாயமற்றது என கூறினார்.