

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், ஈரானின் சக்தி வாய்ந்த நிபுணர்கள் சபை, நாட்டின் உச்ச தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நேற்றிரவு கூடியது. அதில், மறைந்த தலைவர் காமேனியின் மகனான மோஜ்தபா காமேனியை தலைவராக தேர்ந்தெடுப்பது என முடிவு செய்தது. அந்த முடிவை இன்று அறிவித்தது.
அவர் காமேனிக்கு அடுத்து, ஈரானின் புதிய உச்ச தலைவராக இருப்பார் என நீண்டகாலத்திற்கு முன்பிருந்தே எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவருக்கு அரசில் முறைப்படியான பதவி எதுவும் வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், ஈரானின் இந்த முடிவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று வரவேற்றுள்ளார். ஈரானுக்கு, ரஷியா தொடர்ந்து துணை நிற்கும் என்று கூறிய புதின், புதிதாக ஈரானின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள புதிய ஆட்சியாளருக்கு தன்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
ஈரானின் புதிய தலைவருக்கு ஈடு இணையற்ற ஆதரவை ரஷியா வழங்கும் என கூறிய அவர், ஈரான் நண்பர்களுடன் ஒற்றுமையை உறுதிப்படுத்தவும் விரும்புகிறேன் என்று தெரிவித்து உள்ளார். எனினும், ஈரானின் புதிய தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவரை தாக்கி அழிப்போம் என அமெரிக்கா கூறியிருந்தது.