ஏமன் துறைமுகம் மீது அமெரிக்கா கடுமையாக தாக்குதல்; 74 பேர் பலி

ஏமனில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், விமான நிலையங்கள் மற்றும் ராக்கெட் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
ஏமன் துறைமுகம் மீது அமெரிக்கா கடுமையாக தாக்குதல்; 74 பேர் பலி
Published on

சனா,

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில், 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். 1.16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.

இந்நிலையில், பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாக, ஹவுதி பயங்கரவாத அமைப்பு செயல்படுகிறது. இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. செங்கடலில் கப்பல்களை மறித்து, தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஹவுதி பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா கடுமையாக தாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏமனில் உள்ள ராஸ் இசா துறைமுகம் மீது அமெரிக்கா கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதில், 74 பேர் உயிரிழந்தனர். 171 பேர் காயமடைந்தனர்.

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பயங்கரவாதிகளுக்கு எரிபொருள் மற்றும் வருவாய் கொடுக்க கூடிய விசயங்களை அழிப்பது என்று அமெரிக்கா முடிவு செய்து, இந்த தாக்குதலை நடத்தியுள்ளது என அமெரிக்காவின் மத்திய படை தெரிவித்து உள்ளது.

ஏமனில் மார்ச் மத்தியில் இருந்து இந்த தாக்குதல்களை அமெரிக்கா நடத்தி வருகிறது. ஏமனில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், விமான நிலையங்கள் மற்றும் ராக்கெட் தளங்கள் மீதும் வான்வழி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.

செங்கடலில் கப்பல்களை மறித்து, தாக்கும் ஹவுதிகளை தடுத்து நிறுத்தும் இலக்கை அடைவதற்காக அதிக அளவில் படைகளை பயன்படுத்துவோம் என டிரம்ப் தெரிவித்த நிலையில் அமெரிக்காவின் தாக்குதல் தீவிரமடைந்து உள்ளது. எனினும், இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தும் வரை பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாக நாங்களும் தாக்குதல் நடத்துவோம். ஆயுதங்களை கீழே போடமாட்டோம் என ஹவுதி தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com