அமெரிக்காவில் 1 லட்சம் விசாக்கள் ரத்து; டிரம்ப் அதிரடி

அமெரிக்காவில் தேச பாதுகாப்பை வலுப்படுத்தவும் மற்றும் குடியேற்ற சட்டங்களை அமல்படுத்தவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் 1 லட்சம் விசாக்கள் ரத்து; டிரம்ப் அதிரடி
Published on

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்காவில் சட்டவிரோத மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் உள்பட 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விசாக்களை அமெரிக்கா அதிரடியாக ரத்து செய்துள்ளது.

இதுபற்றி அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், 8 ஆயிரம் மாணவர் விசாக்கள் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபட்டு அமெரிக்க போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட 2,500 தனிநபர் விசாக்கள் உள்ளிட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது. இதன்பின்னர் அவர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவார்கள்.

அமெரிக்காவில் ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்று கொண்ட பின்னர், குடியேற்ற விதிகள் மற்றும் சட்டங்களை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், தேச பாதுகாப்பை வலுப்படுத்தவும் மற்றும் குடியேற்ற சட்டங்களை அமல்படுத்தவும் நடந்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

விசாக்களுடன் அமெரிக்காவுக்கு வந்தவர்கள், நாட்டில் தங்கியிருக்கும்போது, தேவையான அனைத்து சட்டரீதியான விசயங்களுக்கும் உட்பட்டே நடந்து கொள்ள வேண்டும். டிரம்பின் நிர்வாகம் இதனை கடுமையாக கடைப்பிடித்து வருகிறது. இதன் அடிப்படையிலேயே நடவடிக்கை பாய்ந்துள்ளது.

சமீபத்தில் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட செய்தியில், அமெரிக்க சட்டங்களை மீறி நடந்து கொள்பவர்கள் குறிப்பிடும்படியாக மாணவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்து இருந்தது. இதனால், அவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படுவதுடன், நாடு கடத்தவும் செய்யப்படுவார்கள். வருங்காலத்தில் அமெரிக்க விசா பெற தகுதியற்றவர்களாகவும் ஆகி விடுவார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com