

சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகள் ஐ.எஸ் தீவிரவாதிகளை அழித்து வருகிறார்கள். ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும்.
இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இதன் முதல்கட்டமாக, மூன்றாண்டுகளுக்கு முன்னர் சிரியாவின் எல்லையோரம் உள்ள ஈராக்கின் மொசூல் நகரை கைப்பற்றிய இப்படையினர் அங்கிருக்கும் கிறிஸ்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்களை ஊரை விட்டு அடித்து விரட்டி விட்டு இஸ்லாமிய அரசை அமைத்துள்ளதாக அறிவித்தனர்.
இந்நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகளை ஓட ஓட விரட்டியவாறு முன்னேறிச் சென்ற ஈராக் இராணுவப் படைகள் மொசூல் நகரம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது விட்டதாக சமீபத்தில் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து ஈராக் பிரதமருடன், பேசிய அமெரிக்க ஜனாதிதி டிரம்ப் மொசூல் நகரை ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றியதற்கு பாராட்டு தெரிவித்தார்.
ஐஎஸ் இயக்கம் தோல்வி அடைந்து ஓடுகிறது. விரைவில் அது துடைத்தெறியப்படும், இந்த சக்திகள் மீண்டும் இப்பகுதிக்குள் வந்துவிடக் கூடாது என்று கூறினார்.
அமெரிக்க தளபதி டவுன்செண்ட் கூறுகையில், ஈராக்கிய இராணுவம், குர்திஷ் பெஷ்மேகரா போராளிகள் மற்றும் உலக அளவிலான கூட்டணி ஆகியோருக்கும் மொசூல் வெற்றியில் பங்குண்டு.
இந்த வெற்றி மட்டும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை நீக்கிவிடாது. கடுமையான போர் காத்திருக்கிறது என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் அவர்கள் சில பகுதிகளில் இன்னும் மறைந்துள்ளனர். அவர்கள் வைத்துவிட்டுச் சென்ற ஐஈடி குண்டுகள் இருக்கின்றன, போர் இத்துடன் முடியவில்லை. சிரியாவிலுள்ள ஐஎஸ் இயக்கமும் தோற்கடிக்கப்பட வேண்டும் என டவுன்செண்ட் தெரிவித்தார்.