காபூலை நெருங்கும் தலிபான்கள் ;அமெரிக்க ரகசிய ஆவணங்கள், பைல்கள் தீ வைத்து எரிப்பு

ஆப்கானிஸ்தானில் இன்று நள்ளிரவோ அல்லது நாளையோ தலிபான்கள் காபூலை கைப்பற்றக் கூடும் என தெரிகிறது.
காபூலை நெருங்கும் தலிபான்கள் ;அமெரிக்க ரகசிய ஆவணங்கள், பைல்கள் தீ வைத்து எரிப்பு
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 12 மாகாணங்கள் தலிபான்கள் வசம் சென்றுள்ளன. அந்நாட்டிலேயே 2-வது மிகப்பெரிய நகரம் காந்தகார். அந்த நகரையே தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட்டனர்.

தலிபான்கள் ஆக்கிரமிப்பைத் தடுக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் அரசு திணறிவருகிறது. அங்குள்ள அரசு அதிகாரிகள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில், சாலை மார்க்கமாகவும், விமானம் மூலமும் அங்கிருந்து தப்பி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள போலீஸ் நிலையங்கள் காலியாக இருப்பதால் போலீசார் தங்கள் பாதுகாப்பு கருதி ஆயுதங்கள், வெடி பொருட்களுடன் வெளியேறுகிறார்கள்.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரமும் தலிபான்கள் வசமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. காபூல் நகரின் எல்லை வரை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். இதனால் வெளிநாட்டு தூதரகங்கள் காபூல் நகரை காலி செய்து விட்டு தங்கள் நாட்டுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.

இன்று நள்ளிரவோ அல்லது நாளையோ தலிபான்கள் காபூலை கைப்பற்றக் கூடும் என தெரிகிறது. ஊடகத் துறையினர், சர்வதேச அமைப்பினரும் பாதுகாப்பாக ஆப்கானிலிருந்து வெளியேற உதவி கோரி வருகின்றனர்.

இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ள மத்திய அரசு காபூலில் உள்ள இந்திய தூதரத்தை உள்ளூர் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு அவர்களை நாடு திரும்புமாறு அறிவுறுத்தும் எனத் தெரிகிறது.

காபூலில் இருந்து இந்திய தூதரக ஊழியர்கள் வெளியேறுவதற்காக உரிய ஆவணங்களையும் மற்றவைகளையும் ஆப்கன் அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் நெருங்கினால் அங்குள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற போதிய படைகளை காபூலுக்கு அனுப்ப அமெரிக்கா தயாராகி வருகிறது. இதுமட்டுமின்றி அங்குள்ள அமெரிக்கர்களை பத்திரமாக கொண்டு வந்த சேர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களிடம் உள்ள ரகசிய ஆவணங்களை உடனடியாக அழித்து விடுவிட்டு, பொருட்களுடன் அமெரிக்கா திரும்புமாறும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆவணங்கள், பைல்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com