

ஈரான்-அமெரிக்கா இடையே 2 வார கால தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். பிறகு அவர் ஈரான் துறைமுகங்களையும், கடல் பகுதியையும் முற்றுகையிடப் போவதாக அறிவித்தார். அதன்படி அமெரிக்க கடற்படை ஈரான் கடல் பகுதியை முற்றுகையிட்டுள்ளது. 'ஆபிரகாம் லிங்கன்' விமானம் தாங்கி கப்பல், 11 அழிவு கப்பல்கள், 4 தாக்குதல் கப்பல்கள் ஆகியவை மத்திய கிழக்கு கடல் பகுதியில் முற்றுகையிட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்காலிக போர்நிறுத்தம் 21-ந் தேதி முடிவடைவதால், அதற்குள் போரை நிரந்தரமாக நிறுத்த புதிய சுற்று பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் உயர்மட்ட அளவில் தொடர்பு கொண்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், துணை பிரதமர் இஷாக் தார், ராணுவ தளபதி ஆசிம் முனிர் ஆகியோர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நாளை (வியாழக்கிழமை) நடைபெறலாம் என்று பாகிஸ்தான் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் அதே நாளில், ஷெபாஸ் ஷெரீப், சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் அழைப்பின்பேரில் சவுதி அரேபியா செல்கிறார்.
எனினும், புதிய சுற்று பேச்சுவார்த்தைக்கு ஈரானும், அமெரிக்காவும் சம்மதித்துவிட்டதாகவும் தூதரக அதிகாரி கூறினார். இதுபற்றி கேட்டதற்கு அமெரிக்க வெள்ளை மாளிகை தரப்பில் எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.நாளை நடைபெறும் இரண்டாவது சுற்றில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.