

வாஷிங்டன்,
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்த ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, குடியேற்ற கோர்ட்டுக்கு விசாரணைக்காக வரும் வெளிநாட்டினரை, கோர்ட்டு வளாகத்திலேயே ரகசியப் பிரிவு அதிகாரிகள் திடீரெனக் கைது செய்து சிறையில் அடைக்கும் புதிய நடைமுறை கடந்த ஆண்டு முதல் தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த அதிரடி கைதுகளால் கோர்ட்டுக்கு வர மக்கள் பயந்ததால் வழக்குகள் முடங்கின. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சான் பிரான்சிஸ்கோ கோர்ட்டு நீதிபதி கேசிபிட்ஸ், டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் அதிரடித் தடை விதித்து உத்தரவிட்டார்.
உரிய திட்டமிடல் இல்லாமல் அரசு இந்த கைதுகளைச் செய்வதாகக் கூறி டிரம்ப் நிர்வாகத்திற்கு நீதிபதி பலத்த கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்றதிலிருந்து, அவரது நிர்வாகம், தீவிரமான நாடு கடத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் குடியேறிகளின் கைதுகளைத் தீவிரப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.