இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழு நபர் அமெரிக்காவில் கைது

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழு நபர் அமெரிக்காவில் கைது
Published on

வாஷிங்டன்,

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த போரில் காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 68 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் - ஹமாஸ் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஹமாஸ் ஆயுதக்குழு கடத்தி சென்ற பணய கைதிகளில் பலர் உயிருடன் மீட்கப்பட்டனர். அதேவேளை, ஹமாசால் கொல்லப்பட்ட பணய கைதிகளில் சிலரின் உடல் இதுவரை இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த நபர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். காசாவை சேர்ந்த முகமது அமின் யாகூப் அல் மெகதி என்ற நபர் ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்தவர் ஆவார். இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளால் ஹமாஸ் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த முகமது அமின் எகிப்தின் கெய்ரோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் 2024 ஜுன் மாதம் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார். பின்னர், அவர் 2024 செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளார். அவர் ஹொக்லகோமா மாகாணம் துல்சா பகுதியில் கார் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த முகமது அமினை கைது செய்த எப்பிஐ அதிகாரிகள் அவரை சிறையில் அடைத்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com