கார்க் தீவை கைப்பற்ற தரை வழி தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்... ஈரான் எச்சரிக்கை

ஈரானின் புஷெர் மாகாண கடற்கரையில் இருந்து 55 கி.மீ. தொலைவில் கார்க் தீவு அமைந்துள்ளது.
ஈரான்
Published on

தெஹ்ரான்

எண்ணெய் வளம் கொண்ட கார்க் தீவை கைப்பற்ற தரை வழி தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.

ஈரானின் கார்க் தீவில் உள்ள முக்கிய எண்ணெய் வளம் நிறைந்த பகுதியை கைப்பற்ற அமெரிக்கா முயற்சிக்கும் என தகவல் வெளியானது. இதற்காக, தரைவழி தாக்குதலை நடத்த கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப்பின் உத்தரவின்பேரில் அதனை தன்னுடைய கட்டுக்குள் எடுத்து கொள்வதற்கான திட்டங்களில் அமெரிக்க ராணுவம் தீவிரத்துடன் ஈடுபட்டு வருகிறது.

வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை

இதுபற்றி ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகே கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளார். அமெரிக்க வீரர்கள் தரை வழியே தாக்குதலில் ஈடுபட்டால், அவர்களை வரவேற்பதற்காக ஈரான் மக்கள் தயாராக காத்திருக்கின்றனர். அமெரிக்க வீரர்கள் கடுமையான விளைவுகளை சந்திப்பார்கள். அவர்களின் வருகைக்காக அந்த பகுதிகளில் நிறைய பேர் ஆவலுடன் உள்ளனர் என கூறியுள்ளார்.

ஈரானுக்கு எதிராக கடந்த பிப்ரவரி இறுதியில் அமெரிக்க-இஸ்ரேல் படைகள் இணைந்து தாக்குதல் நடத்தின. இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் மாதத்தின் இறுதியில், ஈரானுக்கு எதிராக தரைவழியே தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது என டிரம்ப் கூறினார். அப்படி தரைவழியே நெருங்கினால் அதற்கு பதிலடி தர தயாராக இருக்கிறோம் என்று ஈரானும் தெரிவித்து இருந்தது.

எண்ணெய் ஏற்றுமதி

ஒருபுறம் ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம் என கூறி வந்தபோதிலும், மறுபுறம் படைகளை வான், கடல், தரை என பல வழிகளில் ஈரானை நெருக்கும் வகையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது என தகவல் வெளியானது.

இந்த சூழலில், தற்போது மீண்டும் ஈரானை தரை வழியே நெருங்க அமெரிக்கா முயற்சிக்கிறது என்று வெளியான தகவலை தொடர்ந்து இந்த எச்சரிக்கை வெளியாகி உள்ளது.

ஈரானின் புஷெர் மாகாண கடற்கரையில் இருந்து 55 கி.மீ. தொலைவில் கார்க் தீவு அமைந்துள்ளது. அந்நாட்டின் முக்கிய எரிசக்தி பிரிவாக செயல்படுகிறது. நாட்டின் 90 சதவீத கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் வகையில் இந்த பிரிவில் வசதிகள் உள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com