

வாஷிங்டன்,
அமெரிக்காவில் எச்1பி விசாவில் வழங்கப்பட்டு வந்த 60 நாட்கள் சலுகையை ரத்து செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்தது முதல் குடியேற்றத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திறமையான வெளிநாட்டு பணியாளர்களுக்கான விசா கட்டணத்தை உயர்த்தியுள்ள டிரம்ப் நிர்வாகம், சமீபத்தில் உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களில் குடியேற்ற விசா நேர்காணல்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்து, புதிய பயிற்சி திட்டத்தையும் அமல்படுத்தியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக தற்போது எச்1 பி உள்ளிட்ட சில வேலை சார்ந்த விசாக்களுக்கான 60 நாள் சலுகை காலத்தை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான புதிய விதிமுறைக்கான முன்மொழிவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது. இந்த முன்மொழிவு அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ இதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது நடைமுறைக்கு வருவதற்கு முன்பு பொதுமக்கள் கருத்து தெரிவிக்க இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய நடைமுறையின்படி, எச்1 பி உள்ளிட்ட வேலைக்கான விசா வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் வேலை இழந்த பிறகும் அதிகபட்சம் 60 நாட்கள் வரை அமெரிக்காவில் தங்கலாம். அந்த காலகட்டத்தில் புதிய நிறுவனத்தில் வேலைதேடுவது, புதிய வேலை வழங்குநர் மூலம் விசா ஸ்பான்சர்ஷிப்பை பெறுவது அல்லது அமெரிக்காவை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகளை செய்வது போன்றவற்றை மேற்கொள்ளமுடியும்.
2017-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நாள் சலுகை, வேலை இழந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு திடீரென நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படாமல் இருக்க உதவியாக இருந்தது.
வீட்டை விற்பது, குழந்தைகளை பள்ளியில் இருந்து விலக்குவது உள்ளிட்ட தனிப்பட்ட ஏற்பாடுகளையும் இந்த காலகட்டத்தில் அவர்கள் செய்து கொள்ள முடியும். ஆனால், தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய விதி அமலுக்கு வந்தால் வேலை முடிவடைந்தவுடன் எச்1பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்.
இதனால் புதிய வேலை தேடுவதற்காக அமெரிக்காவில் தங்குவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு இருக்காது. இந்த மாற்றத்தால் அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்களை அதிக அளவில் பணியமர்த்தி வரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பாதிக்கப்படலாம்.
குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த திறமையான பணியாளர்களை அதிகம் சார்ந்துள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்த நடவடிக்கை சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்தால் நிறுவனங்களுக்கு சில பணியாளர் பற்றாக்குறை அல்லது பணியாளர் மாற்றம் தொடர்பான இடையூறுகள் ஏற்படலாம் என்பதை அமெரிக்க அரசு தனது முன்மொழிவிலேயே ஒப்புக்கொண்டுள்ளது.
அதே நேரத்தில், வெளிநாட்டவர் வெளியேற்றப்படுவதால் ஏற்படும் காலியிடங்களை தகுதியான அமெரிக்க பணியாளர்களைக் கொண்டு நிரப்பமுடியும் என்றும் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1990-ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட எச்1 பி விசா திட்டம், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது.
அமெரிக்காவில் தகுதியான பணியாளர்கள் கிடைப்பதில் சிரமம் உள்ள நிலையில், குறிப்பிட்ட பணியிடங்களுக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த திறமையான வெளிநாட்டு பணியாளர்களை நியமிக்க எச்1 பி விசா திட்டம் நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.