9 ஈரானிய கடற்படை கப்பல்களை அமெரிக்க படைகள் மூழ்கடித்தது - டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்

'ஆபிரகாம் லிங்கன்' என பெயரிடப்பட்ட அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி நடத்தி இருந்தது.
9 ஈரானிய கடற்படை கப்பல்களை அமெரிக்க படைகள் மூழ்கடித்தது - டிரம்ப் 
வெளியிட்ட பரபரப்பு தகவல்
Published on

வாஷிங்டன்,

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக நேற்று கடுமையாக தாக்கியது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டு உள்ளனர். இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது.

ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இந்த தொடக்க கட்ட தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட மூத்த ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டு விட்டனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தகவல் தெரிவித்திருந்தது.

இந்த சூழலில் அமெரிக்காவின் விமானம் தாங்கி போர் கப்பல் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டின் ஊடகங்கள் தகவல் தெரிவித்தன. அதன்படி, 'ஆபிரகாம் லிங்கன்' என பெயரிடப்பட்ட அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் மீது ஈரான் புரட்சி காவல்படையினர் 4 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி நடத்தியதாக கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், அமெரிக்க கப்பல் கடுமையாக சேதடைந்ததாகவும், பயங்கரவாத ஆக்கிரமிப்பாளர்களுக்கு இனி நிலமும், நீரும் கல்லறையாக மாறும் என்று ஈரான் புரட்சி காவல்படை கூறியிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. முன்னதாக 'எங்கள் நாட்டை பாதுகாத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்வோம்' என ஈரான் மந்திரி அப்பாஸ் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமெரிக்க ராணுவம் 9 ஈரானிய கடற்படைக் கப்பல்களை மூழ்கடித்துள்ளது என்றும், ஈரானின் கடற்படைத் தலைமையகத்தை ஓரளவு அழித்துள்ளது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சோசியல் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் 9 ஈரானிய கடற்படைக் கப்பல்களை அழித்து மூழ்கடித்ததாக எனக்கு இப்போதுதான் தகவல் கிடைத்தது, அவற்றில் சில ஒப்பீட்டளவில் பெரியவை மற்றும் முக்கியமானவை. மீதமுள்ளவற்றை நாங்கள் தேடி வருகிறோம். அவை விரைவில் கடலுக்கு அடியில் மிதக்கும். இந்த ஒரு வித்தியாசமான தாக்குதலில், அவர்களின் (ஈரான்) கடற்படை தலைமையகத்தை நாங்கள் பெருமளவில் அழித்தோம். அதைத் தவிர, அவர்களின் கடற்படை மிகச் சிறப்பாக செயல்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com