அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்

புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்
Published on

இயற்கை பேரிடர்கள்

காலநிலை மாற்றம் காரணமாக உலகின் பல நாடுகள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. இதற்கு வல்லரசு நாடான அமெரிக்காவும் விதிவிலக்கல்ல என்பது போல கடந்த சில மாதங்களாக பல்வேறு இயற்கை பேரிடர்களை அது சந்தித்து வருகிறது. அதன்படி பனிப்புயல், நில நடுக்கம் என தொடர்ந்து அங்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் புயல் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 24-ந் தேதி அங்கு கடுமையான புயல் வீசி கனமழை பெய்தது. இதில் மிசிசிப்பியில் உள்ள கரோல், ஹம்ப்ரீஸ், மன்ரோ மற்றும் ஷார்கி ஆகிய நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. அங்கு மின் கம்பங்கள் சரிந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் பலர் தங்களது வீடு மற்றும் உடைமைகளை இழந்தனர். இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

பலி எண்ணிக்கை உயர்வு

இதற்கிடையே அங்கு தயாராக இருந்த மீட்பு குழுவினர் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதனால் நிலைமை ஓரளவு சமாளிக்கப்பட்டது. எனினும் இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்பில் 14 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும் டஜன்கணக்கானோர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி மிசிசிப்பி மாகாணத்தில் அவசர நிலை பிரகடனத்தை அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று அறிவித்தார். இதன் மூலம் அங்கு இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com