

வாஷிங்டன்,
எண்ணெய் வளமிக்க லிபியாவில் சர்வாதிகாரியாக திகழ்ந்த கடாபி 2011-ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தில் இருந்து வீழ்த்தப்பட்டது முதல் அங்கு அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.
2015-ம் ஆண்டு முதல் லிபியா இரண்டாக பிளவுபட்டு இரு அரசுகளை கொண்டுள்ளது.
தலைநகர் திரிபோலியில் ஒரு அரசும், நாட்டின் கிழக்கு பகுதியில் மற்றொரு அரசும் இயங்கி வருகின்றன. அங்கு பயங்கரவாத குழுக்களும் இயங்கி வருகின்றன.
கிழக்கு பகுதியில் உள்ள அரசு, திரிபோலியை கைப்பற்ற கடந்த ஏப்ரல் மாதம் முதல் முயற்சித்து வருகிறது. அங்கு கடந்த புதன்கிழமையன்று, கிழக்கு பகுதி அரசால் இத்தாலியின் ஆளில்லா விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதற்கிடையே லிபியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், பயங்கரவாதிகளை கண்காணிக்கும் பணியிலும் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்று ஈடுபட்டிருந்தது.
இந்த ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தங்கள் ஆளில்லா விமானத்தை இழந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால் அந்த விமானத்துக்கு நேர்ந்த கதி பற்றியோ, அதன் பின்னணி குறித்தோ அமெரிக்க ராணுவம் வாய் திறக்கவில்லை.