அமெரிக்கா: சுற்றுலா பஸ் விபத்தில் சிக்கி 5 பேர் பலி; இந்தியர்கள் உள்பட 40 பேர் காயம்


அமெரிக்கா:  சுற்றுலா பஸ் விபத்தில் சிக்கி 5 பேர் பலி; இந்தியர்கள் உள்பட 40 பேர் காயம்
x
தினத்தந்தி 23 Aug 2025 8:58 AM IST (Updated: 23 Aug 2025 8:59 AM IST)
t-max-icont-min-icon

பஸ்சில் 1 முதல் 74 வயது வரையுடைய பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த பஸ் ஒன்று விபத்தில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்தியர்கள் உள்பட 54 பேர் நையாகரா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாவுக்காக சென்றுள்ளனர். அவர்கள் சுற்றுலா கொண்டாட்டங்களை முடித்து விட்டு நியூயார்க் நகருக்கு பஸ்சில் திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. நியூயார்க்கின் பப்பல்லோ நகருக்கு 40 கி.மீ. கிழக்கே பெம்புரோக் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. இதனை மாகாண போலீஸ் உயரதிகாரியான மஜ் ஆண்ட்ரே ரே பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது உறுதிப்படுத்தி உள்ளார்.

எனினும், பஸ் எதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை விட்டு சென்றது போன்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை. அந்த பஸ்சில் 1 முதல் 74 வயது வரையுடைய பயணிகள் பயணம் செய்துள்ளனர். பஸ் விபத்தில் சிக்கியதும் பலர் பஸ்சில் இருந்து தூக்கி எறியப்பட்டனர்.

இந்த சம்பவத்தில், 5 பேர் பலியானார்கள். அவர்கள் அனைவரும் முதியவர்கள் என ரே கூறினார். விபத்தில் பலர் சிக்கி கொண்டனர். அவர்கள் பின்னர் மீட்கப்பட்டனர். 40-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story