அமெரிக்கா: உணவு விடுதியில் துப்பாக்கி சூடு; பலர் பலி என அச்சம்

காவல் துறை உயரதிகாரி மேத்யூ ஹிக்ஸ், நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மக்களுக்கான அச்சுறுத்தல் முடிவுக்கு வந்து விட்டது என கூறினார்.
அமெரிக்கா, உணவு விடுதி
Published on

இடஹோ

அமெரிக்காவில் உணவு விடுதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவில் இடஹோ மாகாணத்தில் போய்ஸ் பகுதிக்கு தென்கிழக்கே 130 மைல்கள் தொலைவில், டுவின் பால்ஸ் என்ற பகுதி உள்ளது. இதற்கு வடக்கே, மக்கள் அதிகம் கூட கூடிய பகுதியில் புதிதாக பாஸ்ட்-புட் விற்பனை செய்யும் உணவு விடுதி ஒன்று கடந்த வாரம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

துப்பாக்கி சூடு

இந்த நிலையில், நேற்று மதியம் பலர் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார்.

துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும் அந்த உணவு விடுதியில் இருந்த ஊழியர்கள் பயத்தில் அலறியடித்து நாலாபுறமும் ஓடினர். வாகனங்கள் நிறுத்தும் உள்பட மறைவான பகுதிகளுக்கு தப்பிச்சென்றனர். எனினும், பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்டு உள்ளது.

இதில், பலர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. அதுபற்றிய விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை. ஆனால், 3 பேர் பலியாகி இருக்க கூடும் என கூறப்படுகிறது. அதில், துப்பாக்கி சூடு நடத்திய நபரும் உயிரிழந்து விட்டாரா? என தெரியவில்லை.

மர்ம நபர் யார்?

இதனால், அந்த பகுதியை சுற்றியுள்ள சாலைகள் மற்றும் பெர்ரின் பால பகுதிகள் உடனடியாக மூடப்பட்டு, போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன.

துப்பாக்கி சூட்டுக்கான காரணம் என்னவென தெரிய வரவில்லை. காவல் துறை உயரதிகாரி மேத்யூ ஹிக்ஸ் கூறும்போது, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மக்களுக்கான அச்சுறுத்தல் முடிவுக்கு வந்து விட்டது என கூறினார். அந்த மர்ம நபர் யாரென்றும், துப்பாக்கி சூடு நடத்தியதற்கான நோக்கம் என்ன? என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com