அமெரிக்கா மீது வெனிசூலா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு ‘என்னை கொலை செய்ய சதி செய்கிறது’

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசூலாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 2014–ம் ஆண்டு முதல் சுமார் 20 லட்சம் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்.
அமெரிக்கா மீது வெனிசூலா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு ‘என்னை கொலை செய்ய சதி செய்கிறது’
Published on

கராகஸ்,

வெனிசூலாவில் அதிபராக உள்ள நிக்கோலஸ் மதுரோ, நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும், மாறாக அவர் சர்வாதிகார ஆட்சியில் ஈடுபடுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

இதனை காரணம் காட்டி அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது.

இந்த நிலையில், தன்னை கொலை செய்யவும், வெனிசூலாவில் ஆட்சியை கவிழ்க்கவும் அமெரிக்கா சதி திட்டம் தீட்டுவதாக நிக்கோலஸ் மதுரோ பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார். அதிபர் மாளிகையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது:

என்னை படுகொலை செய்யவும், வெனிசூலாவில் அயல்நாட்டு படைகளை குவித்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவும் அமெரிக்கா சதி திட்டம் தீட்டி வருகிறது. இந்த பொறுப்பு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதனை எதிர்கொள்ள நட்பு நாடுகளின் உதவியோடு வெனிசூலா மக்கள் தாயராக இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com