”கிம் ஜாங் அன் சாதுர்யமானவர்” அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

”கிம் ஜாங் அன் சாதுர்யமானவர்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
”கிம் ஜாங் அன் சாதுர்யமானவர்” அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
Published on

டோக்கியோ,

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடனான சந்திப்புக்கு பிறகு அந்நாட்டுடன் மோதல் போக்கை வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் கைவிட்டார். அணு ஆயுத சோதனைகள் மற்றும் ஏவுகணை சோதனைகளையும் கைவிட்ட கிம் ஜாங் அன், மென்மையான போக்கை கடைபிடித்தது உலக நாடுகள் மத்தியில் வடகொரியா மீதான பார்வையை மாற்றத் தொடங்கியது.

இந்த சூழலில், கடந்த பிப்ரவரி மாதம் 27, 28-ந் தேதிகளில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் மீண்டும் உச்சி மாநாடு நடத்தி இரு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகவில்லை. இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருதரப்பு உறவில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மீண்டும், ஏவுகணை சோதனையை வடகொரியா துவங்கியிருக்கிறது.

இந்த நிலையில், ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், "வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் மிகவும் சாதுர்யமானவர் என்றும் தனது நாட்டை மேம்படுத்த, அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என்பதை அவர் அறிந்து இருப்பார்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com