

அங்காரா,
துருக்கி நாட்டு தலைநகர் அங்காராவில் இருந்து டிராப்சான் நகரை நோக்கி கடந்த சனிக்கிழமை அன்று பிகாசஸ் விமான நிறுவனத்தின் விமானம் சென்று
கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 162 பயணிகளும், 2 பைலட்களும், 4 விமான சிப்பந்திகளும் பயணம் செய்தனர்.
டிராப்சன் நகரை அடைந்த விமானம் அங்குள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக ஓடு பாதையில் இருந்து விலகி அருகில் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. அதிருஷ்டவசமாக பயணிகள், விமான சிப்பந்திகள் உட்பட விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிர் தப்பினர்.
கடற்படையும் இணைந்து பயன்படுத்தும் இந்த விமான நிலையத்தில், ஒற்றை ஓடுதளமே உள்ளது. ஓடுதளத்தில் இருந்து இடது பக்கமாக விமானம் சறுக்கி சென்று பள்ளத்தில் பாய்ந்துள்ளது.
விமானம், பள்ளத்தில் கீழ் நோக்கி கருங்கடலில் பாய்வது போன்ற புகைப்படங்கள் அந்நாட்டு இணைய ஊடகங்களில் வெளியாகியுள்ளது. விமானம் ஓடுபாதையில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. இச்சம்பவம் பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், ஞாயிற்றுக்கிழமை வரை விமானம் நிலையம் மூடப்படுவதாக தெரிவித்துள்ளனர். #Turkey | #plane_crash