

வியட்நாம்,
வியட்நாமின் ஃபூ குவோக் தீவில் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர்.
வியட்நாமின் பூ குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 15 பேர் உயிரிழந்ததாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்துக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் பலியாகி இருப்பதாகவும், கேரளாவை சேர்ந்த இருவர் மற்றும் ஆந்திராவை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளதாகவும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த முதல்கட்ட தகவல்களின்படி, 32 சுற்றுலாப் பயணிகள், சில பணியாளர்களை ஏற்றிச் சென்ற அந்த அதிவேகப் படகு, இன்று காலை 10.30 மணியளவில் படகு கவிழ்ந்து விபத்து நடந்துள்ளது.
'துவோய் த்ரே' நாளிதழின்படி, 23 பேர் கரைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏஜி 26751 என்ற பதிவு எண் கொண்ட இந்த அதிவேகப் படகு, 'மின் ஹுய் ஃபூ குவோக் டிரேடிங் அண்ட் டூரிசம் கம்பெனி லிமிடெட்' நிறுவனத்திற்குச் சொந்தமானது.
சிறப்பான விற்பனைக்காக விநியோகஸ்தர்களை லாவா நிறுவனம் வியட்நாம் அழைத்து சென்றுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்த லாவா செல்போன் விநியோகஸ்தர்கள் சுற்றுலா சென்றுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் பலத்த காற்றும், உயரமான அலைகளும் வீசுவதை ஒரு காணொளி காட்டுகிறது. மீட்புக் குழுவினர் நீரில் இருந்தவர்களை நோக்கி உயிர் காக்கும் மிதவைகளை வீசுவதும், ஜெட் ஸ்கி-கள் மூலம் மீட்கப்பட்டவர்களைக் கரைக்குக் கொண்டு செல்வதையும் அந்தக் காணொளியில் காண முடிகிறது.
இந்த மீட்புப் பணிக்காக எல்லைப் பாதுகாப்புப் படை இரண்டு படகுகளையும் 35 பணியாளர்களையும் ஈடுபடுத்தினர். இந்த நடவடிக்கையில் கடற்படை, கடலோரக் காவல்படை மற்றும் பிற தொடர்புடைய முகமைகள் இணைந்து செயல்பட்டன.
இந்த விபத்து ஹோன் மே ரூட் தீவில் நடந்துள்ளது. இந்தத் தீவு அதன் இயற்கை அழகுக்காகப் பிரபலமானது மற்றும் ஃபூ குவோக் தீவின் மிகச் சிறந்த பவளப்பாறை டைவிங் தளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.