

ஹனோய்,
தென் கிழக்கு ஆசிய நாடான வியட்நாம். அழகிய கடற்கரைகள் மற்றும் தீவுக்கூட்டங்களை கொண்டது. தீவுகளுக்கு இடையே படகு சவாரி
தென் சீனக்கடலில் தாய்லாந்து வளைகுடாவில் அமைந்துள்ள வியட்நாம். தாய்லாந்தைப்போல சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நாடாகவும் அறியப்படுகிறது.
இங்கு, பாறைகளுடன் கூடிய வெண்மணல் கடற்கரைகள், செழுமையான பவளப்பாறைகள் மற்றும் கண்கவர் தீவுக் கூட்டங்களால் நிறைந்துள்ள பு குவோக் கடற்பகுதி சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக திகழ்கிறது.
இங்குள்ள அன் தோய் எனப்படும் தீவுக்கூட்டங்களில் உள்ள தீவுகளுக்கு இடையே படகு சவாரி நடந்து வருகிறது. இந்த படகில் சென்று தீவுகளையும். அழகிய கடற்கரைகளையும் கண்டு ரசிப்பதை சுற்றுலாப்பயணிகள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்தவகையில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற இந்தியாவின் தென் மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற் றுலா பயணிகள் வியட்நாமுக்கு சென்றிருந்தனர்.
வியட்நாமை சேர்ந்த 'திரீலேண்ட்' என்ற நிறுவனம் உள்ளூர் ஒருங்கிணைப்பு நிறுவனமான சாய் வியட்நாம் மூலம் இந்த சுற்றுலாவைஏற்பாடு செய்திருந்தது. இதில் இந்திய சுற்றுலாக்குழுவினர் ஒரு தனியார் செல்போன் நிறுவனத்து டன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
இவ்வாறு சென்றிருந்தவர்களில் 32 பேர் நேற்று அன் தோய் தீவுக்கூட்டங்களில் படகு சவாரியில் ஈடுபட்டு இருந்தனர்.
இதற்காக அதிவேக சொகுசு படகு ஒன்றில் அவர்களுடன் படகு ஓட்டுனர்கள் உள்பட 4 ஊழியர்களும் இருந்தனர். இவ்வாறு 36 பேருடன் புறப்பட்ட இந்த படகு ஒவ்வொரு தீவுகளாக சென்று வந்தது.
பின்னர் அன் தோய் துறைமுகத்துக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தது.
ஹான் மே ருட் னோய் தீவின் கரையில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் படகு வந்து கொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்று வீசியது. இதில் படகு தடுமாறிய நிலையில், கடலும் கொந்தளிக்கத்தொடங்கியது. பல அடி உயரத்துக்கு அலைகள் எழும்பி படகை நிலை குலைய வைத்தன.
இது படகில் இருந்த சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராட்சத அலைகளில் சிக்கி படகு தள்ளாடு வதைப்பார்த்து அவர்கள் செய்வதறியாது கலங்கினர். தங்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர்.
ஆனால் கடல் அலைக்கு ஈடுகொடுக்க முடியாத படகு கண் இமைக்கும் நேரத்துக்குள் கடலில் தலைகீழாக கவிழ்ந் தது. உடனே படகில் இருந்த அனைவரும் கடலுக்குள் விழுந்து மூழ்கினர்.
சுற்றுலா படகு கடலுக்குள் மூழ்கிய தகவல் அறிந்த பிற சுற்றுலா படகுகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந் தன. மேலும் அன் தோய் எல்லை பாதுகாப்பு படை, கடற்படை, கடலோர காவல்படையை சேர்ந்த படகுகளும் மீட்புப் பணிகளுக்கு அனுப்பப்பட்டன.
நவீன தளவாடங்கள் மற்றும் உயிர் காக்கும் கருவிகளுடன் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை தொடங்கிய அவர்கள், கடலில் தத்தளித்தவர்களை விரைந்து மீட்டனர்.
அதன்படி படகு ஊழியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என 21 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஆம்பு லன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.
மீதமுள்ள 15 பேரும் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடலும் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டன.
இந்தநிலையில், கடல்சார் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி வேகப்படகை இயக்கியதாகவும், அதுவே படகு கவிழக் காரணமானதாகவும் கூறி 57 வயதான கேப்டனை வியத்நாமின் அன் ஜியாங் மாகாணக் காவல்துறையினர் கைது செய்தனர்.
விபத்து நடந்தபோது அப்பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மழை பெய்யவில்லை என்பதால் பிற சுற்றுலாப் படகுகளும் இயங்கிக்கொண்டிருந்தன என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் பொதுவாக பு குவோக்கிலிருந்து அதிவேகப் படகுகள் மூலம் அருகிலுள்ள சிறிய தீவுகளுக்குச் செல்கின்றனர். இந்த விபத்தைத் தொடர்ந்து, பல நிறுவனங்கள் தீவுகளுக்கு இடையிலான அதிவேகப் படகு சேவைகளை நிறுத்தி வைத்துள்ளன.
ஃபு குவோக்கிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 18 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் அங்கு சுற்றுலா சென்றுள்ளனர்.