

காத்மண்டு
கிழக்கு நேபாளத்தில் புனித பயணம் மேற்கொண்டபோது, பரவிய வன்முறையை கட்டுப்படுத்த நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகி உள்ளார்.
கிழக்கு நேபாளத்தின் சன்சாரி மாவட்டத்தில் திவான்கஞ்ச் பகுதியில் கப்தன்கஞ்ச் பஜார் பகுதியில், சப்தகோஷி ஆறு நோக்கி சிலர் நேற்றிரவு புனித பயணம் மேற்கொண்டனர்.
அப்போது ஒரு பிரிவினர் பலத்த சத்தத்துடன் இசை கச்சேரியை நடத்தியபடி சென்றுள்ளனர். இதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலானது.
இந்த சம்பவத்தில், வன்முறை பரவியது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீடுகள், மருத்துவமனைகள், வாகனங்கள் மற்றும் பிற பொது சொத்துகள், தனியார் சொத்துகளுக்கு தீ வைத்தும், அவற்றை சூறையாடியும் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனால், பஜார் பகுதியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். வானை நோக்கி எச்சரிக்கும் வகையில் துப்பாக்கி சூடு நடத்தினர். எனினும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையை கைவிடவில்லை. இதனால், போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார்.
அவர், ஓம் பிரகாஷ் மேத்தா (வயது 24) என அடையாளம் காணப்பட்டு உள்ளார். தவிர, இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். இதனை அடுத்து, இன்று காலை 7 மணி முதல் கிழக்கு நேபாளத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமலானது. அடுத்த உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.