

டாக்கா,
வங்காளதேசத்தின் நாராயண்கஞ்ச் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் பக்ரீத் பண்டிகை குர்பானிக்காக வளர்க்கப்பட்டு வந்த அல்பினோ ரக வெள்ளை எருமை மாடு ஒன்று இணையத்தில் வைரலானது. அதன் தலையில் உள்ள பொன்னிற முடி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் தலை முடியை போன்று இருக்கிறது. அதன் ஒரு முக அமைப்பும் டிரம்ப் தோற்றத்துடன் ஒத்து போனது.
இதனால் 700 கிலோ எடை கொண்ட அந்த எருமை மாடுக்கு டிரம்ப் என பெயர் சூப்பட்டது. இதனையடுத்து இணையத்தில் வைரலான அந்த எருமை மாட்டை பார்க்க பல்வேறு பகுதிகளில் இருந்து பார்வையாளர்கள் அந்த பண்ணைக்கு வந்தனர்.
இந்தநிலையில் அல்பினோ ரக வெள்ளை எருமையை பக்ரீத் பண்டிகை குர்பானிக்காக பலியிட முடிவு செய்யப்பட்ட நிலையில் அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு கவலைகள் மற்றும் அசாதாரணமனா பொது ஆர்வம் காரணமாக வெள்ளை நிற எருமையை பலியிடலில் இருந்து மீட்க வங்காள தேச அரசு முடிவு செய்தது.
அதன்படி எருமையை காப்பாற்றவும் அதை விலை கொடுத்து வாங்கியவருக்கு பணத்தை திருப்பி கொடுக்கவும் வங்காளதேச உள்துறை மந்திரி சலாவுதீன் அகமது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மேலும் எருமையை அரசாங்க பராமரிப்பில் டாக்காவில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவிற்கு மாற்றவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து வெள்ளை எருமையின் உரிமையாளர் மொனிருஸ் ஜமானிடம் அதிகாரிகள் பேசினர். பின்னர் எருமையை பண்ணையில் இருந்து தலைநகர் டாக்காவிலுள்ள தேசிய உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அந்த எருமை பராமரிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே மொனிருஸ் ஜமான் கூறும்போது, அல்பினோ ரக வெள்ளை எருமையை பாதுகாத்து வளர்க்க அரசு முடிவு செய்துள்ளதாக போலீசார் என்னிடம் தெரிவித்தனர். இதனையடுத்து அதை நாங்கள் ஒப்படைத்துவிட்டோம். அந்த எருமைக்கு ஈடாக அரசு எனக்கு இழப்பீடு வழங்கும் அல்லது வேறொரு எருமை, பசு அல்லது காளையை அளிக்கும் என்று அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர் என்றார்.