உக்ரைன் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ரஷியா திட்டம் என தகவல்

உக்ரைனில் மிகப்பெரிய தற்கொலை தாக்குதல்களை நடத்த ரஷியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ரஷியா திட்டம் என தகவல்
Published on

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி போரை தொடங்கியது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதலை தொடுத்தது. ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து கொண்டிருக்கிறது.

இதில் கிழக்கு உக்ரைனில் சில பகுதிகளை ரஷியா தன் வசப்படுத்தி உள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் அந்நாட்டு ராணுவம், ரஷிய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது.

இது ரஷியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த நிலையில் உக்ரைனில் மிகப்பெரிய தற்கொலை தாக்குதல்களை நடத்த ரஷியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே போர் ஒரு ஆண்டை கடந்ததையடுத்து உக்ரைனில் தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது தற்கொலை தாக்குதல் குறித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தி மிரர் ஊடகம் வெளியிட்ட செய்தியில், ரஷிய அதிபர் புதின், உக்ரைனில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த உத்தரவை பிறப்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ரஷிய ராணுவத்தால் இந்த தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த உத்தரவு அடுத்த மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் ரஷிய ராணுவத்தால் வலுவாக இலக்கை அடைய முடியவில்லை. இதுரை ஒருங்கிணைந்த ஆயுத தாக்குதலை திறம்பட செய்ய முடியவில்லை. இதனால் தற்கொலை தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com