

ஈரான் மீது கடந்த 28-ந்தேதி போரை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள், அந்த நாடு மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல் இன்று 14-வது நாளாக நீடித்து வருகிறது.அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அதிரடி தாக்குதலால் ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பல நகரங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. அங்கு இதுவரை சுமார் 1,350 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும் வளைகுடா நாடுகளை தாக்கி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் அமெரிக்காவும் கடும் சேதத்தை சந்தித்து வருகிறது.இந்த நிலையில், ஈரானுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்த போது, அமெரிக்காவின் கே.சி.-135 ரக வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
இதுகுறித்து அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு ஈராக் பகுதியில் ஒரு விமானம் விழுந்து நொறுங்கியது. மற்றொரு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. இந்த விபத்து எதிரிகளின் தாக்குதலாலோ அல்லது நட்பு நாடுகளின் தவறுதலான தாக்குதலாலோ ஏற்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா ஏற்கனவே மூன்று விமானங்களை இழந்த நிலையில், தற்போது 4-வது விமானத்தையும் இழந்துள்ளது.