

வாஷிங்டன் டி.சி.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் கொள்கைகள், அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, ஈரானுக்கு எதிராக நடந்து வரும் போர் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்படி, குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளை சேர்ந்த மாநிலங்களில் கடற்கரை பகுதியில் இருந்து கடற்கரை நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர். பெரிய நகரங்களில் அதிக அளவிலும், புறநகர் மற்றும் கிராம பகுதிகளில் குறைந்த அளவிலும் அவர்கள் கூடியிருந்தனர்.
அப்போது அவர்கள் கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். கைகளில் அரசுக்கு எதிரான, எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பலகைகளை ஏந்தியிருந்தனர். கலாசார வெளிப்பாடுகளாக பாட்டு பாடியபடியும், நடனம் ஆடியபடியும் அவர்கள் சென்றனர்.
அந்த வாசகங்களில் டிரம்ப் நிர்வாகம், ஈரான் மோதல் உள்ளிட்டவற்றுடன் குடியுரிமை நடைமுறைக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, மான்ஹாட்டன், மின்னசோட்டா, மின்னபோலிஸ் நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேரணியாக சென்றவர்கள் அமெரிக்க கொடிகளையும், பேனர்களையும் ஏந்தியபடி சென்றனர். அப்போது உக்ரைன் மற்றும் மாற்று பாலினத்தவர்களின் உரிமைகளுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பியபடி சென்றனர். இதனால் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.