

பியாங்யாங்,
ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியாவின் தலைவராக கிம் ஜாங் அன் கடந்த 2011ம் ஆண்டு பதவியேற்றது முதல் தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை அந்நாடு சோதித்து வந்தது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி இந்த சோதனைகளை நடத்தியதால் வடகொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, அந்த நாடு கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை சோதித்து அண்டை நாடுகளையும், அமெரிக்காவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 4 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்ற சோதனையை வடகொரியா நடத்தி உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில், தென்கொரியாவில் உள்ள ஏவுகணை செலுத்தும் மையத்துக்கு அந்த நாட்டின் ராணுவ மந்திரி சூ ஊக் சென்றபோது வடகொரியாவின் ஏவுகணை சோதனையை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர், தென்கொரியா மீது வடகொரியா ஏவுகணைகளை ஏவுவதற்கு திட்டம் எதுவும் வைத்திருந்தால், அந்த நாட்டின் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்துவதற்கான திறனும், தயார் நிலையும் தென் கொரியாவுக்கு இருக்கிறது என்று கூறினார்.
இதற்கு வடகொரியா கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யூ ஜாங் கூறும்போது, தென் கொரியா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால், தங்களுடைய நாடு அணு ஆயுதங்களை உபயோகப்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென் கொரியா ராணுவ தாக்குதலில் ஈடுபட்டால், எங்களுடைய அணு ஆயுத படைகள் எதிரி நாட்டை தாக்கும் தங்களுடைய கடமையை நிச்சயம் செய்யும் என்று அவர் தெரிவித்து உள்ளார். இவர்தான் வடகொரியாவில் தலைவர் கிம் ஜாங் அன்னிற்கு அடுத்த 2ம் இடம் வகிக்கிறார் என்று தென் கொரியாவின் உளவு அமைப்பு கூறுகிறது. வட கொரிய ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியில், தென் கொரியா மற்றும் அமெரிக்கா தொடர்பான விஷயங்களில் பொறுப்பு அதிகார மையம் ஆக கிம் யோ ஜாங் இருந்து வருகிறார்.
வடகொரியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் என்ற தென் கொரியாவின் பாதுகாப்பு துறை மந்திரியின் பேச்சு ஒரு மிக பெரிய தவறு என்றும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.