

புதுடெல்லி,
மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள போர் பதற்றத்தையொட்டி இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், இஸ்ரேல் வெளியுறவு மந்திரி கிடியோன் சார் உடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், பிராந்தியத்தில் நிலவி வரும் சூழ்நிலைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும், ஜெய்சங்கர் ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி பென்னி வோங் உடனும் பேசியுள்ளார். அப்போது ஈரான் மற்றும் இஸ்ரேல் தொடர்பான மோதலால் உருவான நிலை குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன.
ஈரான், ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதித்ததையடுத்து அமெரிக்கா அதன் துறைமுகங்களுக்கு கடற்படை முற்றுகை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் மற்றும் எல்.என்.ஜி போக்குவரத்து நடைபெறுவதால் அங்கு ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளன.
இந்த நிலையில அனைத்து நாடுகளுக்கும், குறிப்பாக இந்தியாவுக்கும், ஹார்முஸ் நீரிணையில் சுதந்திரமான கடல் போக்குவரத்து அவசியம் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. மேற்கு ஆசியா, இந்தியாவின் முக்கிய எரிசக்தி ஆதாரங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.