

ஈரானுடனான மோதல் தொடர்ந்து வரும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை ‘டிரம்ப் ஜலசந்தி’ என மாற்றலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். இதற்கு ஈரான் மகிழ்ச்சி அடையும் என்றும் அவர் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாக ஹார்முஸ் ஜலசந்தி விளங்குகிறது. ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக இந்த கடல்வழிப் பாதையின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 2-ந் தேதி ஹார்முஸ் ஜலசந்தியை ‘டிரம்ப் ஜலசந்தி’ என பெயர் மாற்றலாம் என்று டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது அந்த கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.ஹார்முஸ் ஜலசந்தி தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதன் பெயரை மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.மேலும், ஈரான் அணு ஆயுதத்தை பெறுவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் மீண்டும் உறுதிபட கூறியுள்ளார்.டிரம்பின் இந்த கருத்து, ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றியுள்ள பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மேலும் கூறுகையில், அமெரிக்காவின் எண்ணய் கையிருப்பு 500 ஆண்டுகளுக்கு போதுமான அளவு உள்ளது. அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் இடைக்கால தேர்தலுக்கு பிறகு ஈரானுடனான போர் உடனடியாக முடிவுக்கு வரும். ஈரானால் இனியும் தாக்குப்பிடிக்க முடியாது. அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த ஈரான் தீவிரமாக முயற்சிக்கிறது. ஆனால், அமெரிக்காவின் பொருளாதார அழுத்தத்தை எதிர்கொண்டு அவர்களால் இனியும் நீடிக்க முடியாது” என்றார்.