

சிங்கப்பூர்,
சிங்கப்பூர் அமைச்சர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதையடுத்து அந்நாட்டு பிரதமரின் ஆண்டு வருமானம் 64 சதவீதம் உயர்ந்து 27 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் துறைகளில் இருந்து சிறந்த திறமையாளர்களை அரசியலுக்கு ஈர்ப்பதற்காகவும், ஊழலற்ற ஆட்சியை தொடர்வதற்கும் தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், அமைச்சர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால், உலகின் மிக அதிக சம்பளம் வாங்கும் அமைச்சர்களைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் விளங்கி வருகிறது.
சிங்கப்பூரில் கடைசியாக, 2012-ல் அமைச்சர்களின் சம்பளம் மாற்றிய மைக்கப்பட்டது. அப்போது மக்களின் எதிர்ப்பு காரணமாக, 36 சதவீதம் குறைக்கப்பட்டது. அதன்பின்னர் 2017, 2023-ல் சில காரணங்களால் சம்பளம் உயர்த்தப்படவில்லை. அதன் பிறகு தற்போது தான் அமைச்சர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளது. இந்த உயர்வு வரும் அக்டோபர் 15-ந் தேதி முதல் அமலாக உள்ளது.
சிங்கப்பூரின் புதிய ஊதியக் கட்டமைப்பின்படி, பிரதமர் லாரன்ஸ் வோங்கின் ஆண்டு வருமானம் 2.2 மில்லியன் சிங்கப்பூர் டாலரிலிருந்து 3.6 மில்லியன் சிங்கப்பூர் டாலராக உயர்த்தப்பட உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 26 கோடியே 9 லட்சம் ரூபாய் ஆகும். இதன்மூலம், உலகிலேயே அதிக சம்பளம் பெறும் அரசுத் தலைவர் என்ற இடத்தை லாரன்ஸ் வோங் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்கிறார்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் தனக்கு கிடைக்கும் ஊதிய உயர்வை அறப்பணிகளுக்கு நன்கொடையாக வழங்கப் போவதாக வோங் அறிவித்தார். இந்த ஊதிய உயர்வைத் தொடர்ந்து உலகிலேயே ஆண்டு வருமானம் பெரும் பிரதமர்களின் வரிசையில் முதல் இடத்தில் சிங்கப்பூர் பிரதமரான லாரன்ஸ் வோங் உள்ளார். அதற்கு அடுத்தப்படியாக ஹாங்காங் தலைமை நிர்வாகி ஜான் லீ ரூ.6.79 கோடியும், சுவிட்சர்லாந்து அதிபர் கை பெர்மெலின் ரூ.5.73 கோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரூ.3.78 கோடியும், பிரான்ஸ் பிரதமர் ஆன்டி பர்ஹாம் ரூ.2.18 கோடியும், இந்தியா பிரதமர் நரேந்திர மோடி ரூ.33.60 லட்சமும் வாங்குகின்றனர்.