அடுத்த போப் யார்..? புதிய போப்பை எவ்வாறு தேர்வு செய்கிறார்கள்..?


அடுத்த போப் யார்..? புதிய போப்பை எவ்வாறு தேர்வு செய்கிறார்கள்..?
x

புதிய போப் ஆக தேர்வு செய்யப்படுபவருக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் வரை பல்வேறு கட்ட வாக்கெடுப்பு நடைபெறும்.

வாடிகன் சிட்டி,

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

இந்த சூழலில் இன்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்று வருகிறது.

ஜார்ஜ் பெர்கோகிலோ என்ற இயற்பெயர் கொண்ட போப் பிரான்சிஸ், அப்பதவியில் அமர்ந்த முதல் லத்தீன் அமெரிக்கர் என்ற பெருமையைக் கொண்டவர். 2013-ம் ஆண்டும் மார்ச் 13-ம் தேதி 266-வது போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டார். சுமார் 12 ஆண்டுகள் போப் ஆண்டவராக இருந்த போப் பிரான்சிஸ் மறைந்துள்ள நிலையில், புதிய போப் ஆண்டவர் தேர்வு எப்படி நடைபெறும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

புதிய போப் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்..?

புதிய போப்பை தேர்வு செய்யும் நடைமுறைகள் 15-20 நாட்களுக்கு பிறகு தொடங்கும். 80 வயதுக்கு குறைவான கார்டினல்கள் வாடிகனில் கூடி புதிய போப் தேர்வுக்கான ரகசிய நடைமுறைகளை தொடங்குவார்கள். வாடிகனில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் வைத்து இந்த நடைமுறைகள் நடைபெறும்.

புதிய போப் தேர்வு நடைமுறையில் ஈடுபட்டு இருக்கும் கார்டினல்கள் வெளி உலக தொடர்பு இன்றி இருப்பார்கள். ஊடகங்களிடம் மட்டும் இன்றி போன்கள் மூலமாகவும் யாருடனும் தொடர்பில் இருக்க மாட்டார்கள். புதிய போப் ஆக தேர்வு செய்யப்படுபவருக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் வரை பல்வேறு கட்ட வாக்கெடுப்பு நடைபெறும்.

ஒவ்வொரு சுற்று முடிவுக்கு பின்னரும், வாக்கெடுப்பில் பயன்படுத்தப்படும் தாள்கள் எரிக்கப்படும். இந்த நடைமுறைகளுக்கு பின்னர் கருப்பு நிற புகை சிக்னல்கள் வெளியிடப்பட்டால் போப் தேர்வு செய்யப்படவில்லை என்பதை குறிக்கும். வெள்ளை நிற புகை குறியீடு வந்தால், புதிய போப் தேர்வு செய்யப்பட்டதாக அர்த்தம். புதிய போப் தேர்வு செய்யப்பட்ட பிறகு, இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு அவருக்கு முறைப்படி கோரிக்கை வைக்கப்படும். அவர் ஏற்றுக்கொண்டால் புதிய போப் ஆக அறிவிக்கப்படுவார்.

செயிண்ட் பீட்டர் பசிலிகாவில் இருந்து இந்த அறிவிப்பு வெளியிடப்படும். அதன்பிறகு புதிய போப், செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் இருந்து மக்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவார்.

அடுத்த போப் யார்?

அதன் பின்னர், செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் பிரதான பால்கனியில் இருந்து, வெள்ளை நிற கவசம் அணிந்து, பொதுமக்களுக்கு தனது முதல் உரையை வழங்குவார்.

அடுத்த போப் ஆண்டவருக்கான போட்டியில், ஹங்கேரியை சேர்ந்த கார்டினல் பீட்டர் எர்டோ (72), பிலிப்பைன்ஸை சேர்ந்த கார்டினல் லூயிஸ் அன்டோனியோ டாக்லே (67), ஆப்பிரிக்காவின் கானாவை சேர்ந்த கார்டினல் பீட்டர் டர்க்சன்(76), கார்டினல் பியட்ரோ பரோலின்(70) ஆகியோர் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த போப் யார் என்று கணிப்பது சாத்தியமற்றது என்றாலும், சில கார்டினல்களுக்கு மற்றவர்களை விட சிறந்த வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

1 More update

Next Story