இந்தியாவுடன் சிறந்த நட்பு இருந்தபோதும் அதிக வரி விதித்தது ஏன்? - டிரம்ப் விளக்கம்

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக இந்த பேட்டியிலும் டிரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது.
லண்டன்,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது மனைவி மெலனியாவுடன் இங்கிலாந்து சென்றிருந்தார். நேற்று முன்தினம் வின்ட்சர் கோட்டையில் மன்னர் சார்லஸ், ராணி கமிலாவை சந்தித்து பேசினார். பின்னர் பிரதமர் கெயிர் ஸ்டார்மரை நேற்று சந்தித்தார். முதலில் இருவரும் வர்த்தக தலைவர்களுடனான சந்திப்பு ஒன்றில் பங்கேற்றனர். இதில் இரு நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
பின்னர் பக்கிங்காம்ஷையரில் உள்ள செக்கர்ஸ் இல்லத்தில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர். மேலும் ரஷியா-உக்ரைன் போர், ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகளும் இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றன.
பேச்சுவார்த்தைக்குப்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஸ்டார்மரை கடுமையான பேச்சுவார்த்தையாளர் என பாரட்டிய டிரம்ப், இரு நாடுகளுக்கு இடையே இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தையும் புகழ்ந்துரைத்தார்.
இந்த பேட்டியின்போது, இந்தியா மீது அதிக வரி விதிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டிரம்ப் பதிலளிக்கும்போது கூறியதாவது:-
அது மிகவும் எளிமையானது. எண்ணெய் விலை குறைந்தால் புதின் பின்வாங்குவார். அவருக்கு வேறு வாய்ப்பு இருக்காது. அந்த போரை அவர் நிறுத்துவார். நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமானவன் என்பது உங்களுக்கு தெரியும். இந்திய பிரதமருடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். நேற்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தும் கூறினேன். நாங்கள் சிறந்த உறவை பேணி வருகிறோம். அவரும் ஒரு அழகான அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
ஆனாலும் நான் அவர்களுக்கு வரி விதித்தேன். சீனாவும் அமெரிக்காவுக்கு அதிக வரி செலுத்துகிறது. அவர்கள் (இந்தியா, சீனா) ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காகவே நான் அவர்களை எதிர்க்கிறேன். வரி விதிக்கிறேன். உக்ரைன் போர் தொடர்பாக சில நல்ல செய்திகள் வரும் என நம்புகிறேன்.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
முன்னதாக இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக இந்த பேட்டியிலும் டிரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது.






