தலைநகரை விட்டு வெளியேறப் போவதில்லை - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

ரஷிய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் படைகள் போரிட்டு வரும் நிலையில், கீவ் நகரை விட்டு தான் செல்லப் போவதில்லை என அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
தலைநகரை விட்டு வெளியேறப் போவதில்லை - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
Published on

கீவ்,

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புடின் நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து நேற்று காலை முதல் போர் தொடங்கியது. இந்த போரில் உக்ரைனில் உள்ள ராணுவ நிலைகள், விமான தளங்கள், ராணுவ கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது;-

ஐரோப்பிய நாடுகளில் இரண்டாவது உலகப் போருக்கு பின்னர் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ரஷியா என்னை முதல் இலக்காக வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. எனது குடும்பம்தான் அவர்களின் இரண்டாவது இலக்கு.

உக்ரைனின் தலைமையை அழித்து, அரசியல் ரீதியாகவும் உக்ரைனை அழிக்க அவர்கள் நினைக்கின்றனர். நான் கீவ் நகரத்திலேயே இருப்பேன். எனது குடும்பத்தினரும் உக்ரைனில் தான் இருக்கிறார்கள். ரஷிய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் படைகள் போரிட்டு வரும் நிலையில், நான் உக்ரைனின் தலைநகரை விட்டு செல்ல மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com