நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ரசிகையாக இருப்பதா? - மனைவியை குத்திக்கொன்ற இந்தியர்

அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ரசிகையாக இருப்பதா என தனது மனைவியை குத்திக்கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ரசிகையாக இருப்பதா? - மனைவியை குத்திக்கொன்ற இந்தியர்
Published on

நியூயார்க்,

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள குயின்ஸ் நகரில் வசித்து வந்த இந்திய தம்பதி தினேஷ்வர் பத்திதாட் (வயது 33), டோனி டோஜோய் (27). இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம்தான் திருமணம் நடந்தது. தினேஷ்வர் அங்குள்ள ஒரு மதுபான விடுதியில் வேலை பார்த்து வந்தார்.

டோஜோய், இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தீவிர ரசிகை. அவரின் படம் வெளியானால் முதல் நாளிலேயே பார்த்துவிடுவார். அதுமட்டும் இன்றி எப்போதும் அவர் நடித்த படங்களின் பாடல்களைத்தான் கேட்டுக்கொண்டிருப்பார்.

தனது மனைவி தன்னை விட நடிகர் ஹிருத்திக் ரோஷனை அதிகம் விரும்பியதால் அவர் மீது தினேஷ்வருக்கு கோபமும், வெறுப்பும் இருந்து வந்தது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது ஹிருத்திக் ரோஷன் விவகாரம் தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ்வர் தனது மனைவி டோஜோயை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

பின்னர் அவர் டோஜோயின் மூத்த சகோதரியின் செல்போனுக்கு உங்கள் தங்கை டோஜோயை கொன்றுவிட்டேன். வீட்டுச்சாவியை, கீழே பூந்தொட்டியில் வைத்திருக்கிறேன் என்று குறுஞ்செய்தி அனுப்பினார்.

அதனை தொடர்ந்து வீட்டுக்கு எதிரே உள்ள மரத்தில் தினேஷ்வர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். டோஜோயின் சகோதரி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தினேஷ்வர் மற்றும் டோஜோயின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com