

காபூல்,
ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து கடந்த 15-ந் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலீபான்கள் வசம் சென்றது. தலீபான்களின் ஆட்சிக்கு பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற முயற்சி செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின. இறுதியில் அமெரிக்கப் படைகள் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி இரவு ஆப்கானிஸ்தானில் இருந்து மொத்தமாக வெளியேறின.
ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலீபான் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பெண்கள் சுகாதாரத் துறையிலும், பிற துறைகளிலும் வேலை செய்யலாம் என்றும் பெண்களுக்கு எதிராக பாகுபாடு இருக்காது என்றும் தலீபான்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் புதிதாக உருவாகவுள்ள ஆப்கானிஸ்தான் அமைச்சரவையில் பெண்களின் பங்கும் இருக்க வேண்டும் எனக் கோரி, அந்நாட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காபூலில் உள்ள அதிபர் மாளிகைக்கு வெளியே, இன்று கூடிய பெண்கள், அமைச்சரவையில் பெண்களுக்கு வாய்ப்பு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆப்கானிஸ்தானில் கல்வி, சமூகம், பேச்சு சுதந்திரம், அரசியல் உள்ளிட்டவற்றில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு முழு உரிமைகள் வழங்கப்பட வேண்டும், மனித உரிமைகளை நிலைநாட்ட வேண்டும், பழமைவாதமும் மத அடிப்படை வாதத்திற்கும் திரும்ப முடியாது என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தின் போது கையில் ஆயுதம் ஏந்திய தலீபான்கள் அங்கு இருந்தனர். இருப்பினும் போராட்டம் நடைபெற அவர்கள் அனுமதி அளித்தனர்.