ஏமன்: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலி

மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு ஏமன்.
ஏமன்: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலி
Published on

சனா,

மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு ஏமன். இந்நாட்டில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நிலவி வருகிறது. இந்த போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆயுத உதவி வழங்கி வருகின்றன.

ஏமனின் சில பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அந்த பகுதிகளை கைப்பற்ற ஏமன் அரசுப்படையினர் முயற்சித்து வருகின்றனர். அதேவேளை, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது ஏமன் அரசுப்படையினர் மீதும், சவுதி, இஸ்ரேல் போன்ற நாடுகள் மீதும் செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீதும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

அரசுப்படையினர் - ஹவுதி மோதல்

இதனிடையே, கடந்த சில நாட்களாக ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்து வருகிறது. இந்த மோதலின்போது பொதுமக்களை குறிவைத்தும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஹவுதி தாக்குதல் - 4 பேர் பலி

இந்நிலையில், ஏமனின் மரிப் மற்றும் அல் மஹா ஆகிய நகரங்களில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதலை அரசுப்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால், ஏமனில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com