சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; 3 மாலுமிகள் பலி

இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது.
சனா,
இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது.இந்த போரில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கடந்த சில நாட்களாக செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், செங்கடலில் பயணித்த கிரீஸ் நாடு நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர். சிறிய வகை படகுகளில் வந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சரக்கு கப்பல் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். மேலும், டிரோன்களை கொண்டு சரக்கு கப்பல் மீது குண்டுகளை வீசினர். இந்த தாக்குதலில் சரக்கு கப்பலில் பயணித்த 3 மாலுமிகள் உயிரிழந்தனர். முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையும் செங்கடலில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.






