ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட காதலியின் கல்லறையில் இளைஞர் தற்கொலை

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட காதலியின் கல்லறையில் இளைஞர் தற்கொலை
Published on

ஜெருசலேம்,

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. அதேவேளை, காசாவில் இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர், பொதுமக்கள் என 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதனிடையே, 2023 அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியபோது இஸ்ரேலின் நிவக் பாலைவனம் பகுதியில் கிப்ருஸ் ரிம் பகுதியில் சூப்பர் நோவா இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசைநிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீதும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இசைநிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் 370 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த இசைநிகழ்ச்சியில் பார் அஸ்ரப் (வயது 30) தனது காதலியான லிரோன் பர்டாவுடன் பங்கேற்றார். அப்போது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் லிரோன் பர்டா படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடல் எல்கனா நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஹமாஸ் ஆயுதக்குழுவால் காதலி படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் பார் அஸ்ரப் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.

காதலியின் கல்லறை முன் தற்கொலை

இந்நிலையில், பார் அஸ்ரப் நேற்று எல்கனா நகரில் அடக்கம் செய்யப்பட்ட தனது காதலி லிரோன் பர்டாவின் கல்லறைக்கு சென்றார். அங்கு காதலியின் படுகொலையால் கடந்த 2 ஆண்டுகளுக்குமே மிகுந்த மன உளைச்சலில் இருந்த பார் அஸ்ரப் காதலி லிரோன் பர்டாவின் கல்லறை முன் நின்று துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று பார் அஸ்ரப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேலில் அக்டோபர் 7ல் ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காதல் ஜோடிகள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com