

சியோல்
இணைய உலகில் 'மிக அழகான கொலையாளி' என்று வர்ணிக்கப்படும் கிம் சோ-யங் என்ற 20 வயது பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தென் கொரிய அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிம் சோ-யங், 'டேட்டிங் ஆப்' மூலம் ஆண்களை தொடர்பு கொண்டு பழகியுள்ளார். இதுவரை தான் டேட்டிங் சென்ற ஆண்களுக்கு போதை மற்றும் மனநல மருந்துகள் கலந்த பானங்களை அவர் கொடுத்துள்ளார். இந்த விஷ பானத்தை குடித்தவர்களில் 2 ஆண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் மயக்கமடைந்து உயிர் பிழைத்தனர்.
ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட கிம் சோ-யங், ஆண்களிடம் இருந்து பணத்தை பறிக்கவே இந்த செயலை செய்துள்ளார். குற்றத்தை செய்வதற்கு முன்பு, "மதுவில் தூக்க மாத்திரை கலந்தால் மரணம் ஏற்படுமா?" என்று சாட்ஜிபிடி செயலியில் அவர் தேடிய அதிர்ச்சி தகவலும் விசாரணையில் அம்பலமானது.
ஆரம்பத்தில் இவருடைய புகைப்படங்களை பார்த்து இணையத்தில் பலர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், இவரது கொடூர முகம் தெரிந்ததும் 'மிக அழகான கொலையாளி' என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் இவரை தூற்ற தொடங்கினர்.
சியோல் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது, "குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு பிறர் மீது இரக்கமில்லாத மனநல பாதிப்பு உள்ளது. அவர் செய்த குற்றத்திற்காக சிறிதும் வருந்தவில்லை. எனவே, அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்" என்று அரசு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கண்ணீருடன் கோரியுள்ளனர்.