

2021-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியின்படி சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்கி, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி திட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மறியல் போராட்டத்துக்கு சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் கனகவேல் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகவீரபாண்டியன், ஓய்வூதிய பாதுகாப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எபனேசர் டேனியல், தன்ராஜ், ஜெயலட்சுமி உள்பட 60-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். திடீர் சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2021-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி திருநெல்வேலி மாவட்ட செயலாளர் குட்டியம்மாள் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேர்தல் வாக்குறுதியின்படி சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்கி, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி திட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 5 ஆண்கள், 98 பெண்கள் என மொத்தம் 103 பேரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்து அருகிலுள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.