ஆடி பௌர்ணமி ஹயக்ரீவர் வழிபாடு

கல்விக்கடவுளான ஹயக்ரீவருக்கு ஆடி பௌர்ணமி அன்று ஏலக்காய் மாலைகள் அணிவித்து தீபம் ஏற்றி வணங்கி வர கல்வியில் ஏற்படும் தடைகள் அகலும்.
ஆடி பௌர்ணமி ஹயக்ரீவர் வழிபாடு
Published on

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்பட்டாலும், குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு, கிராம தெய்வ வழிபாடு, சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு என அனைத்து தெய்வ வழிபாட்டிற்கும் இந்த மாதம் ஏற்றதாகும். அவ்வகையில், மகா விஷ்ணுவின் அவதாரமான ஹயக்ரீவரை வழிபடுவதற்கு ஆடி மாத பௌர்ணமி ஏற்ற நாளாக அமைந்துள்ளது.

ஆடி பௌர்ணமி அன்று ஹயக்ரீவர் அவதரித்தார் என்று சொல்லப்படுகிறது. இந்த தினத்தை ஹயக்ரீவர் ஜெயந்தியாக வைணவர்கள் கொண்டாடுகிறார்கள். கல்விக்கடவுளான ஹயக்ரீவருக்கு ஆடி பௌர்ணமி அன்று ஏலக்காய் மாலைகள் அணிவித்து தீபம் ஏற்றி வணங்கி வர கல்வியில் ஏற்படும் தடைகள் அகலும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

குழந்தைகள் சரியாக படிக்க முடியாமல் கஷ்டப்பட்டாலும், குழந்தைகளுக்கு ஞாபக மறதி அதிகமாக இருந்தாலும் ஹயக்ரீவர் ஜெயந்தி அன்று ஹயக்ரீவரை வழிபடலாம். அதிலும், பௌர்ணமி திதி இருக்கக்கூடிய நேரத்தில் பூஜை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு.

இந்த ஆண்டு ஹயக்ரீவர் ஜெயந்தி ஆகஸ்ட் 8-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று வருகிறது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.52 முதல் சனிக்கிழமை பிற்பகல் 2.26 வரை பௌர்ணமி திதி உள்ளது. 

ஆடி பௌர்ணமி அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்படும். அன்று பெருமாள் ஆலயங்களில் வழிபாடு செய்வது முக்திக்கு வழியாக அமையும். ஆடி மாத செவ்வாய், வெள்ளி மற்றும் பௌர்ணமியில் காமாட்சி அம்மனை வழிபட திருமண தடைகள் அகலும். சுப நிகழ்வுகள் உண்டாகும்.

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மீனாட்சி அம்மனை வழிபட குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். கணவன்-மனைவியிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆடி மாதத்தில் மாரியம்மனை வழிபட்டு வர கண் திருஷ்டி கோளாறுகள் விலகும் என்பது நம்பிக்கை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com