கந்த சஷ்டி விரதம் நாளை ஆரம்பம்

கந்த சஷ்டி விழாவிற்காக காப்பு கட்டுபவர்கள் காலை சூரிய உதயத்திற்கு முன்பாக காப்பு கட்டிக் கொண்டு விரதத்தை துவக்கி விட வேண்டும்.
கந்த சஷ்டி விரதம் நாளை ஆரம்பம்
Published on

முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் மிகச் சிறந்த விரதம் கந்த சஷ்டி விரதம் ஆகும். மாதந்தேறும் வரும் வளர்பிறை, தேய்பிறை பட்சங்களில் இரண்டு சஷ்டி திதிகள் வந்தாலும் ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே கந்த சஷ்டி என போற்றப்படுகிறது. இதனை மகா சஷ்டி என்றும் குறிப்பிடுவதுண்டு.

மாத சஷ்டியின் பேது பக்தர்கள் முருகப் பெருமானை வேண்டி விரதம் இருப்பது உண்டு. இருந்தாலும் பெரும்பாலான முருக பக்தர்கள் ஐப்பசி மாதத்தில் வரும் மகா கந்த சஷ்டியின்போது சஷ்டி விரதம் கடைபிடிப்பார்கள்.

முருகப் பெருமான், சூரனை வதம் செய்து தேவர்களை காத்த திருநாள் என்பதால் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பிரதமை திதியில் துவங்கி, சப்தமி வரையிலான 7 நாட்கள் சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட வேண்டும். சஷ்டி அன்று சூரசம்ஹாரத்தை தரிசித்த பிறகு, சப்தமி திதியில் நடைபெறும் முருகப் பெருமானின் திருக்கல்யாணத்தை தரிசித்த பிறகே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். சிலர் சஷ்டி வரை மட்டும் விரதம் இருப்பதுண்டு.

திருச்செந்தூரில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நாளை (22-10-2025) தொடங்குகிறது. 27ம் தேதி சூரசம்ஹாசம் நடைபெற உள்ளது. கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் நாளை முதல் விரதம் இருக்க வேண்டும். அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, விரதத்தை துவக்கி விட வேண்டும். காப்பு கட்டுபவர்களும் காலை சூரிய உதயத்திற்கு முன்பாக காப்பு கட்டிக் கெண்டு விரதத்தை துவக்கி விட வேண்டும். வரும் 28-ம் தேதி வரை விரதம் அனுஷ்டிக்கவேண்டும்.

மகா கந்த சஷ்டி விரதத்தில் மிளகு விரதம், இளநீர் விரதம் என பல வகைகள் உண்டு. இது ஏழு நாட்கள் மட்டும் கடைபிடிக்கப்படும் விரதம் ஆகும். இன்னும் தீவிரமான முருக பக்தர்கள், பக்தியின் காரணமாகவும், முருகனிடம் தாங்கள் முன்வைத்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேற வேண்டும் என்பதற்காகவும் 48 நாட்கள் எனப்படும் ஒரு மண்டலத்திற்கு கந்த சஷ்டி விரதத்தை கடைபிடிப்பார்கள்.

விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி, தூய்மையான ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டில் முருகனுக்கு பூஜை செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள் பகலில் தூங்கக் கூடாது. விரதம் இருக்கும் நாட்களில் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அலங்காரம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, பகை கடிதல், சண்முக கவசம் பேன்ற பாடல்களை பாடலாம். அத்துடன் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தல் மிகவும் நன்று.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com