பிரதமரின் பீடுமிகு பேச்சு

டெல்லி செங்கோட்டையில் 73-வது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி தேசிய கொடி ஏற்றிவைத்து ஆற்றிய உரை ஒரு பெருமைக்குரிய உரையாக இருந்தது.
பிரதமரின் பீடுமிகு பேச்சு
Published on

இந்த ஆண்டு டெல்லி செங்கோட்டையில் 73-வது சுதந்திர தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி தேசிய கொடி ஏற்றிவைத்து ஆற்றிய உரை ஒரு பெருமைக்குரிய உரையாக இருந்தது. 95 நிமிடங்கள் அவர் ஆற்றிய உரையில், மடைதிறந்த வெள்ளம்போல் பல்வேறு கருத்துகள் பாய்ந்து வந்தன. 10 நாட்களுக்கு முன்பு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு மற்றும் 35ஏ பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், இந்த சுதந்திரதினம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இதுகுறித்து தனது உரையில் பேசும் போது, ஒரே தேசம், ஒரே அரசியல் சட்டம் என்ற கனவு நனவாகியுள்ளது என்று மிக எளிதாக எல்லோருக்கும் புரியும்படி இந்த பிரச்சினையில் பதில் அளித்தார். மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கு மிக முக்கியத்துவம் அளித்து பேசினார். தங்கள் குடும்பத்தின் அளவை சிறியதாக வைத்துக்கொள்பவர்கள், நாட்டுப்பற்றை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்று கூறினார்.

தற்போது ராணுவம், கடற்படை, விமானப்படைக்கு என தனித்தனியே தளபதிகள் இருக்கிறார்கள். 1999-ல் நடந்த கார்கில் போருக்கு பிறகு, மறைந்த பிரதமர் வாஜ்பாய் அரசில் இந்த போர் குறித்த ஒரு ஆய்வு நடந்தது. அப்போது தரைப்படை, விமானப்படை, கடற்படை முப்படைக்கும் சேர்த்து ஒரு தலைமை தளபதி பதவி உருவாக்கப்படவேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், முப்படைக்கும் சேர்த்து ஒரு தலைமை தளபதி நியமிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுவர் கூறிய நீரின்று அமையாது உலகு என்ற குறளை தமிழ் மணம் கமழ கூறிய பிரதமர், ஒவ்வொரு வீட்டிலும் குழாய் மூலம் குடிநீர் கிடைக்க மத்திய-மாநில அரசுகள் ஜல ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி செலவிடப்படும் என்ற ஒரு நல்ல செய்தியை அறிவித்தார். இதுபோல, விவசாயிகளுக்கு பயனளிக்கும் திட்டங்களையும் அறிவித்தார்.

இதுமட்டுமல்லாமல், இதுவரையில் யாரும் சொல்லாத ஒரு கருத்தை மிக துணிச்சலாக சொன்னார். எல்லோருமே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட் களை பயன்படுத்தவேண்டும் என்று கூறிவிட்டு, செல்வத்தை உருவாக்குபவர்களை மிகவும் மதிப் போடும், மரியாதையோடும் நடத்தவேண்டும். ஏனெனில், செல்வத்தை உருவாக்குபவர்கள் நாட்டுக்காக பணியாற்றுகிறார்கள். அவர்களை நாம் சந்தேகப்படக் கூடாது. அவர்களை அலட்சியம் செய்யக்கூடாது. அவர்களுக்கு ஊக்கம் அளிக்கவேண்டும். முன்னுரிமை அளிக்கவேண்டும். செல்வம் உருவாக்கப்படாவிட்டால், ஏழைகளுக்கு பலன் இருக்காது. என்னை பொறுத் தளவில், செல்வத்தை உருவாக்குபவர்கள் நாட்டின் செல்வம் என்று கூறினார். ஊழலுக்கு எதிராகவும் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். ஒருமுறை பயன் படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்கவேண்டும் என்பது உள்பட மேலும் நல்ல பல கருத்துகளை கூறினார். பிரதமரின் உரையில் கூறப்பட்ட சிறு குடும்பமே நாட்டுப்பற்று மிக்கது, செல்வத்தை உருவாக்குபவர்களை மதிக்கவேண்டும். ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவேண்டும் என்ற பிரதமரின் அறிவிப்புகளை நாம் அனைவரும் வரவேற்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரமே பாராட்டியிருக்கிறார். இந்த சுதந்திர தினவிழாவில் பிரதமர் கூறிய கருத்துகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்துவிட்டால், நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியா பீடுநடைபோடும் நாள் தூரத்தில் இல்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com