

விருதுநகர்,
நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நெல் கொள்முதல்
விருதுநகர் மாவட்டத்தில் நடப்பாண்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்திட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் 22 நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களது அறுவடை நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய விவசாயிகள் விவரங்களை இணையதளம் மூலம் எளிய முறையில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் உள்ள உழவர் நுழைவு பகுதியில் விவசாயிகள் தொலைபேசி எண்ணைப்பதிவு செய்து கடவுச்சொல் பெற்றபின் விவசாயின் பெயர், ஆதார் எண், நிலத்தின் வகை, சர்வே எண், அடங்கல், இருப்பிட விவரம், நெல்லின் வகை எதிர்பார்க்கப்படும் மகசூல், விற்பனை செய்ய விரும்பும் தேதி, வங்கிகணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
இணைய வழி
பதிவு செய்யப்பட்ட விவரங்களை அந்தந்த கிராம நிர்வாக அலுவலரால் சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் கொள்முதல் செய்யப்படும் நிலையம், தேதி மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் செல்போனுக்கு தெரிவிக்கப்படும். அதன்படி கொள்முதல் செய்யப்படும்.
எனவே தற்போது இணைய வழியில் நெல் கொள்முதலுக்கு முன்பதிவு செய்யும் முறை நடைமுறைப் படுத்துவதால் விருதுநகர் மாவட்ட விவசாயிகள் விரைந்து முன்பதிவு செய்து சேவைகளை பயன்படுத்தி நெல்லை விற்பனை செய்து பயனடையலாம். நெல் கொள்முதல் தொடர்பாக மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விருதுநகர். மேலும் விவரங்களுக்கு 9442132016 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.