தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கள்ளக் கூட்டணி - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு


தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கள்ளக் கூட்டணி - டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு
x

தி.மு.க.விற்கு எடப்பாடி பழனிசாமி கள்ளத்தனமாக உதவி செய்து வருகிறார் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

தேனி,

தேனி பாராளுமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார். இதனையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஆண்டிப்பட்டியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி உள்ளார். ஆனால் தி.மு.க.வின் கூட்டணி பிரதமராக யாரை அறிவித்துள்ளார்கள்? ஸ்டாலினையா? ஸ்டாலின் யார் என்று தமிழ்நாட்டை தவிர்த்து அடுத்த மாநிலத்திற்கு கூட தெரியாது.

அதேபோல எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க.விற்கு உதவி செய்வதற்காக இரட்டை இலை சின்னத்தை கையில் வைத்துக்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கள்ளக் கூட்டணி வைத்துள்ளனர் என்பதை நான் உறுதியாக கூறுகிறேன்.

தி.மு.க.வை ஒழிப்பதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் கொண்டு வந்த இரட்டை இலை சின்னத்தை, எடப்பாடி பழனிசாமி தி.மு.க.விற்கு உதவுவதற்காக பயன்படுத்தி வருகிறார். இதன் மூலம் தி.மு.க.விற்கு எடப்பாடி பழனிசாமி கள்ளத்தனமாக உதவி செய்து வருகிறார். தி.மு.க.வின் பி டீமாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.

இதனை தமிழக மக்கள் நன்கு அறிந்து கொண்டு தான் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தி.மு.க.வை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று தான் கூறினார்கள் . நமக்கு எத்தனை சீட்டு கிடைத்தது என்பது முக்கியமல்ல எண்ணம் தான் முக்கியம். ஆகவே மத்தியில் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்பதுதான் நமது ஒரே குறிக்கோள்; அதற்காக கூட்டணி கட்சியினர் பாடுபட வேண்டும்.

இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார்.


Next Story