பா.ஜ.க.வை திருப்திப்படுத்தவே 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

பா.ஜ.க.வை திருப்திப்படுத்த 7 கட்டமாக தேர்தல் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
பா.ஜ.க.வை திருப்திப்படுத்தவே 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் போல்பூர் நாடாளுமன்ற தொகுதியில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

நாடு முழுவதும் வெப்ப அலை வீசி வருகிறது. இருப்பினும், 7 கட்டமாக தேர்தல் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். முன்பெல்லாம் மே 2 அல்லது 3-ந்தேதியுடன் தேர்தல் பணிகள் முடிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு கடுமையான வெயிலுக்கிடையே 3 மாதங்களாக இழுக்கின்றனர். பா.ஜனதாவை திருப்திப்படுத்தவே தேர்தல் கமிஷன் 3 மாத காலத்துக்கு 7 கட்டமாக தேர்தலை ஏற்பாடு செய்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து துர்காபூர்-பர்தாமன் தொகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்திலும் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். அவர் தற்போது மோடியின் கருணையால் வாழ்ந்து வருகிறார். தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள மோடிக்கு தினமும் வணக்கம் வைக்கிறார்.

ராஜ்நாத்சிங்கோ அல்லது நிதின் கட்காரியோ பிரதமர் ஆகியிருக்கலாம். அப்படியென்றால் பிரச்சினை இருக்காது. கொஞ்சமாவது மரியாதை தெரிந்த ஒரு ஜென்டில்மேன் பிரதமர் பதவியில் இருக்கும் திருப்தி கிடைக்கும்.

ராஜ்நாத்சிங்குக்கு மரியாதையுடன் சொல்லிக் கொள்கிறேன். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, பொது சிவில் சட்டம் ஆகியவற்றை அமல்படுத்துவதை எதிர்ப்போம். நீங்கள் எவ்வளவு வலிமையானவர் என்று பார்த்து விடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com