370-வது சட்டப்பிரிவு ரத்தால் தான் காஷ்மீரில் ஓட்டு சதவீதம் அதிகரிப்பு: அமித்ஷா மகிழ்ச்சி


370-வது சட்டப்பிரிவு ரத்தால் தான் காஷ்மீரில் ஓட்டு சதவீதம் அதிகரிப்பு: அமித்ஷா மகிழ்ச்சி
x

கோப்புப்படம் 

2019-ம் ஆண்டு தேர்தலில் பதிவானதை விட காஷ்மீரில் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய மந்திரி அமித்ஷா மகிழ்ச்சி தெரிவித்தார்.

புதுடெல்லி,

காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் மக்களவை தொகுதியில் நேற்று முன்தினம் 4-வது கட்ட தேர்தலின்போது வாக்குப்பதிவு நடந்தது. அதில், 38 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அத்தொகுதியில் 14.43 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன. அதற்கு முந்தைய தேர்தல்களிலும் 25 சதவீதத்துக்குள்தான் ஓட்டு சதவீதம் காணப்பட்டது.

ஓட்டு சதவீதம் அதிகரித்ததற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 370-வது சட்டப்பிரிவை நீக்கிய மோடி அரசின் முடிவுக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாகவும், ஜனநாயகம் மீது மக்கள் நம்பிக்கை அதிகரித்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதே சமயத்தில், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் கூறுகையில், ''370-வது பிரிவு நீக்கத்தையும், காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டதையும் மக்கள் ஏற்கிறார்களா, இல்லையா என்று அறிய இந்த ஓட்டு சதவீதம் போதுமானது அல்ல'' என்றார்.

மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, ''ஸ்ரீநகர் ஓட்டு சதவீதம் நன்றாக உள்ளது. இருப்பினும், 370-வது பிரிவு நீக்கத்தை ஏற்கவில்லை என்ற செய்தியை டெல்லிக்கு மக்கள் தெரிவித்துள்ளனர்'' என்று கூறியுள்ளார்.


Next Story