வேறு சின்னம் கேட்கும் நாம் தமிழர் கட்சி; இன்று மாலைக்குள் தேர்தல் ஆணையம் முடிவு


வேறு சின்னம் கேட்கும் நாம் தமிழர் கட்சி; இன்று மாலைக்குள் தேர்தல் ஆணையம் முடிவு
x
தினத்தந்தி 25 March 2024 10:40 AM GMT (Updated: 25 March 2024 10:58 AM GMT)

மைக் சின்னத்திற்கு பதில் படகு அல்லது பாய்மரப்படகு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

சென்னை,

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு 2019, 2021 தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்திடம் தாமதமாக விண்ணப்பித்ததால் சீமான் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னத்தை ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மைக் சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. படகு அல்லது பாய்மர படகு சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.

வேறு சின்னம் ஒதுக்கும்படி நாம் தமிழர் கட்சி விடுத்துள்ள கோரிக்கை குறித்து இன்று மாலைக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story